ஸ்பைடர்மேன்போல சுவரில் ஏறிய சிறுமிகளின்
வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது.
பீகார் மாநிலம், பாட்னா நகரில் வசித்து வரும்
இந்தச் சிறுமிகள் எவ்விதப் பயிற்சியும் இல்லாமல்
இந்தத் திறனைப் பெற்று வியக்க வைக்கின்றனர்.
11 வயது அக்ஷிதா குப்தா எவ்விதப் பிடிமானமும்
இன்றி 12 அடி உயர சுவரில் ஸ்பைடர்மேன்போல
ஏறி பிரம்மிக்க வைக்கிறார். அவரது சகோதரியான
9 வயது கிருபிதாவும் அவ்வாறே சுவரில் ஏறி
ஆச்சரியப்பட வைக்கிறார்.
மென்மையான கிரானைட் சுவரில் எந்த உதவியும்
இல்லாமல் தங்களால் ஏறமுடியும் என்று கூறுகின்றனர்
சகோதரிகள் இருவரும்.
பெற்றோர் இருவரும் வேலை விஷயமாக வெளியே
சென்றிருந்தபோது பொழுதுபோக்கிற்காக சுவரில்
ஏறிய அக்ஷிதாவுக்கு அது சுலபமாகியுள்ளது. அவரைப்
பார்த்து தங்கை கிருபிதாவும் அவ்வாறே செய்ய ஆரம்பித்துள்ளார்.
வீட்டுக்கு வந்ததும் மகள்களின் செயல்களைப் பார்த்து
ஆச்சரியமடைந்துள்ளனர் அம்மாவும் அப்பாவும். பிறகு,
”இது மிகவும் ஆபத்தானது. இனிமேல் அப்படியெல்லாம்
சுவரில் ஏறக்கூடாது” என்று அம்மா தடைவிதித்துள்ளார்.
அதையும் மீறி நன்கு பழகிவிட்ட மூத்த மகளான அக்ஷிதா,”
விரைவில் இமயமலைச் சிகரங்களில் ஏறுவேன்” என்கிறார்
தன்னம்பிக்கையுடன்.