வாணியம்பாடி அருகே மேய்ச்சலில் இருந்த ஆடுகளை காரில் திருடிச்சென்ற வழக்கறிஞர் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட அம்பலால் நகர் பகுதியை சேர்ந்தவர் அஞ்சலை.
இவர் அதேப் பகுதியில் உள்ள வழக்கறிஞர் சுல்தான் நிலத்தில் ஆடுகளை மேய்ச்சலில் விட்டுள்ளார். அப்போது, ஒரு செம்மறி ஆடு காணாமல் போயியுள்ளது. அதனை தொடர்ந்து அஞ்சலை ஆடு காணாமல் போனது குறித்து அப்பகுதி மக்களிடையே கூறியுள்ளார்.
இதையடுத்து, கடந்த 14ஆம் தேதி அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது வழக்கறிஞர் சுல்தான் மற்றும் அவரது நண்பர் திருமலை ஆட்டை காரில் திருடிச் சென்றது தெரியவந்தது. பின்னர் வாணியம்பாடி நகர காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சுல்தான் மற்றும் அவரது நண்பர் திருமலையை கைது செய்து சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
