இந்த ஆண்டிற்கான IPL தொடர் முடிவதற்கு இன்னும் 2 போட்டிகள் தான் மிச்சம் உள்ளன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முதல் அணியாக பைனலுக்கு முன்னேறி விட்டது. Quailfier 2 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதில் வெல்லும் அணி ஜூன் 3ம் தேதி, குஜராத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணியுடன் மோதும். 17 வருடங்களாக கோப்பை வெல்ல பெங்களூரு, பஞ்சாப் அணிகள் கடும்போராட்டம் நிகழ்த்தி வருகின்றன.
மறுபுறம் ‘பீனிக்ஸ்’ பறவை போல தொடரின் பாதியில் உயிர்த்தெழுந்த மும்பை, தன்னுடைய 6வது கோப்பைக்காக முட்டி மோதுகிறது. பெங்களூரு, பஞ்சாப், மும்பை 3 அணிகளுமே சமபலத்துடன் இருப்பதால், இந்தாண்டு IPL பைனல் ரசிகர்களுக்கு நல்லதொரு விருந்தாக அமையக்கூடும்.
இந்தநிலையில் சுவாரஸ்யமான புள்ளிவிவரம் ஒன்று தெரிய வந்துள்ளது. RCB பவுலர் Josh Hazelwood, இதுவரை எந்தவொரு இறுதிப்போட்டியிலும் தோற்றது இல்லையாம். CLT 20, BBL, IPL, 20 மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பை என அனைத்து பைனல் போட்டியிலும், அவர் விளையாடிய அணி வெற்றிக்கோப்பையை முத்தமிட்டுள்ளது.
இதேபோல மும்பை அணியின் கரண் சர்மாவுக்கும் (Karn Sharma) ஒரு அதிர்ஷ்டம் இருந்தது. ஹைதராபாத், மும்பை, சென்னை அணிகளுக்காக அவர் ஆடியபோது, அந்த அணிகள் IPL கோப்பையை வென்றன. இதனால் IPL தொடரின் Lucky Charm ஆக அவர் பார்க்கப்பட்டார். ஆனால் கரண் சர்மாவின் இந்த அதிர்ஷ்டம் 2022ம் ஆண்டு RCB அணிக்காக விளையாடிய போது முடிவுக்கு வந்தது.
கரண் சர்மா போல Josh Hazelwoodன் அதிர்ஷ்டத்திற்கும், பெங்களூரு அணி முட்டுக்கட்டை போடுமா? இல்லை அவரின் அதிர்ஷ்டம் தொடருமா? என்பது தெரியவில்லை. ஆச்சரியப்படும் விதமாக கடந்த 2018ம் ஆண்டில் இருந்து, Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணியே IPL கோப்பையை கையில் ஏந்தியுள்ளது.
அதன்படி பார்த்தால் இந்தாண்டு RCBதான் கப்பைத் தூக்க வேண்டும். என்றாலும் இதுவரை 3 இறுதிப்போட்டியில் பெங்களூரு தோல்வி அடைந்திருப்பதால், மேற்கண்ட அதிர்ஷ்டங்கள் RCBக்கு Work ஆகுமா? இல்லையா? என்பதை நாம் ஜூன் 3ம் தேதி வரை, காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.