Monday, June 16, 2025

வாளை வாங்க மறுப்பு; மேடையில் ஆத்திரமடைந்த கமல் – நடந்தது என்ன??

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மக்கள் நீதி மய்யம் தற்போது திமுக கூட்டணியில் இருக்கிறது. மக்கள் நீதி மய்யத்துக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட திமுக கூட்டணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதற்கு மாறாக கமல்ஹாசனுக்கு ராஜ்யசபா MP பதவி வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது.

அதன்படி தற்போது தமிழகத்தில் காலியான ராஜ்யசபா MP -களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் திமுக கூட்டணியில் கமல்ஹாசனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் போட்டி ஏதுமின்றி அவர் ராஜ்யசபா MPயாக தேர்வாகியுள்ளார்.அடுத்த முறை நாடாளுமன்றம் கூடும்போது கமல்ஹாசன் ராஜ்யசபா MP-யாக பொறுப்பேற்க இருக்கிறார்..

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதை கொண்டாடும் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக சென்னை ஆழ்வார்பேட்டையில் பாராட்டு விழா ஒன்று நடைபெற்றது.

இந்த விழாவில் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவிக்க கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். மேலும் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்ததோடு சில பரிசுகளையும் கொடுத்தனர்.

அதில், ஒரு ரசிகர் கமல்ஹாசன் கன்னட நடிகர் சிவராஜ் குமாருடன் இருக்கும் போட்டோவை பரிசாக கொடுத்தார். இதனைத் தொடர்ந்து மற்றொருவர் கையில் பெரிய தங்க நிறம் கொண்ட வாள் ஒன்றை பரிசாக கொடுத்தார். அதனை பார்த்தவுடனே, கடுப்பான கமல்ஹாசன் முதலில் வாள் ஏதும் வேண்டாம் பா என்பது போல் கூறினார். ஆனால், அந்த நபர் விடாமல் வாளை பிடிங்க பிடிங்க என கூறினார்.

ஒரு கட்டத்தில் மிகவும் கடுப்பான கமல்ஹாசன் கீழே வையுங்கள் என கடும் கோபத்துடன் கூறினார். தற்போது இது தொடர்பான வீடியோகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news