Friday, June 20, 2025

மூள்கிறதா 3ம் உலகப் போர்? அமெரிக்காவுக்கு ரஷ்யா பகிரங்க எச்சரிக்கை! அணி திரளும் உலக நாடுகள்!

தற்போது தலைப்பு செய்தியாக உள்ள இஸ்ரேல், ஈரான் போரால் மூன்றாம் உலகப் போர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யா நேரடியாகவே எச்சரித்திருக்கிறது. கடும் அழிவுகளை ஏற்படுத்தும் அணு குண்டுகளை தயாரிக்க ஈரான் தீவிர முயற்சி செய்து வருவதாக மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “ஈரான் மீது போர் தொடுக்க விரும்பவில்லை. எனினும் ஈரானின் அணு சக்தி திட்டத்தை அழிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். நான் என்ன செய்வேன் என்பது யாருக்கும் தெரியாது. அடுத்த வாரம் மிகப்பெரிய சம்பவங்கள் நிகழும்” என கூறியுள்ளார். இதனிடையே ரஷ்ய வெளியுறவுத் துறை துணை அமைச்சர் செர்ஜி ரயாப்கோவ், மாஸ்கோவில் நேற்று நிருபர்களிடம் பேசும்போது, “ஈரானுக்கு எதிராக அமெரிக்கா போர்தொடுத்தால் மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்று வார்னிங் கொடுத்துள்ளார்.

சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன், பெய்ஜிங்கில் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், “ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்தால் சீனா மிகக் கடுமையாக எதிர்க்கும்” என்று கூறியிருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இன்னொரு பக்கம் கடந்த சில ஆண்டுகளில் ரஷ்யாவுக்கு சுமார் 20,000 கன்டெய்னர்களில் வடகொரியா ஆயுதங்களை அனுப்பி வைத்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இதேபோல வடகொரியா சார்பாக ஈரானுக்கும் ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த நகர்வுகளை வைத்து பார்க்கும்போது தற்போதைய சூழலில் இஸ்ரேல், ஈரான் மோதலால் மூன்றாம் உலகப் போர் மூளும் அபாயம் எழுந்திருக்கிறது. ஒருவேளை அவ்வாறு உலகப்போர் மூண்டால் பேரழிவு ஏற்படுவது நிச்சயம் என்று சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news