Thursday, June 26, 2025

காசாவிலும் போர் நிறுத்தப்படுகிறதா? கோரிக்கை வைத்த மக்கள்! ‘டிரம்ப்’ சொன்ன அந்த ‘வார்த்தை’!

காசா, ஈரான், இஸ்ரேல்… இந்த பெயர்கள் கடந்த சில நாட்களாக உலகத்தின் கவனத்தைஈர்த்துள்ளன. கடந்த ஜூன் 13ம் தேதி அமெரிக்கா ஈரானின் அணு ஆயுதத் தளங்கள் மீது குண்டுவீச்சு நடத்தியது, அந்த தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலும் ஈரானும் இடையே 12 நாட்களாக நடந்த போருக்கு தற்காலிகமாக ஒரு நிறைவு கிடைத்தது. டொனால்ட் டிரம்ப் தலைமையில் அமெரிக்கா நடத்திய இந்த மத்தியஸ்தம், ஒரு போர்நிறுத்த ஒப்பந்தத்தை உருவாக்கியிருக்கிறது. இது, பிராந்தியத்தில் அமைதி எட்டும் புதிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

ஆனால் இதே நேரத்தில் காசாவில் நிலவும் சூழ்நிலை முற்றிலும் வேறுபட்டது. போர்நிறுத்தம் இஸ்ரேல்–ஈரான் இடையே நடந்தாலும், காசாவில் இன்னும் துப்பாக்கிச் சத்தம் குறையவில்லை. CNN வெளியிட்ட செய்தி படி, கடந்த சில வாரங்களில் மட்டும் காசாவில் 860 பேர் உயிரிழந்துள்ளனர். கான் யூனிஸ் பகுதியில் நடந்த தாக்குதலில் 7 இஸ்ரேலிய வீரர்கள் பலியாகினர். காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்ததாவது, கடந்த அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்தியதிலிருந்து, இப்போது வரை 56,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில், டொனால்ட் டிரம்ப் காசாவிலும் ஒரு போர்நிறுத்தம் “மிக நெருக்கத்தில்” உள்ளது என கூறியிருக்கிறார். அவர் தனக்குத் தகவல் வழங்கியுள்ள தூதர் ஸ்டீவ் விட்காஃப் மூலம், காசா தொடர்பான முக்கிய முன்னேற்றங்கள் நடைபெறுவதாகவும், விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என்றும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

இது ஒரு புறமிருக்க இஸ்ரேலிலும் வெளிநாட்டிலும், ஹமாஸ் வைத்திருக்கும் பணயக்கைதிகளை மீட்கும் முயற்சி மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இப்போது பணயக்கைதிகளின் குடும்பங்களும், ஆதரவாளர்களும், அரசை அழுத்திக்கொண்டு வருகின்றனர். “இஸ்ரேல்–ஈரான் போர்நிறுத்தம் ஏற்பட்டிருக்கும் இந்நேரத்தில், இதைப் பயன்படுத்தி காசாவிலும் சமாதானம் கொண்டு வர வேண்டும்” என அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

மத்தியஸ்த நாடுகள் — குறிப்பாக கத்தார் மற்றும் எகிப்து — இருபுறங்களுடனும் பேசிக் கொண்டு வருகின்றன. சமீபத்திய மணிநேரங்களில் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. ஹமாஸ் அதிகாரிகள் இதை உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால், இன்னும் எந்த புதிய திட்டமும் அவர்களிடம் வரவில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.

இதற்கு முன்பு அமெரிக்கா முன்மொழிந்த 60 நாள் போர்நிறுத்த ஒப்பந்தம், சில திருத்தங்களால் முறிந்தது. அந்த ஒப்பந்தத்தில் உயிருடன் உள்ள பணயக்கைதிகளில் பாதியையும், இறந்தவர்களில் பாதியையும் மட்டுமே விடுவிக்க திட்டமிட்டிருந்தது. இந்த அமைப்பை ஹமாஸ் ஏற்க மறுத்தது.

இப்போது,டொனால்ட் டிரம்ப் ஈரானுடனான போரை நிறுத்தச் செய்தார். அதே தன்னுடைய நீதி மற்றும் அழுத்தத்துடன், ஹமாஸையும் இஸ்ரேலையும் சமாதானம் செய்ய முடியாதா? என்ற முக்கியமான கேள்வி எழுகிறது.

சில நாட்களுக்குள் காசா பகுதியும் அமைதிக்குள் வரக்கூடும் என்ற நம்பிக்கையை பலர் பகிர்ந்துகொள்கிறார்கள். பணயக்கைதிகள் மீண்டு வர, மேலும் உயிர்கள் தப்பிக்க, ஒரு நல்ல முடிவுக்கு எல்லோரும் ஏங்குகிறார்கள்.

காஸாவின் இந்த மோசமான பயணத்தில் ஒரு துளி நம்பிக்கையை உருவாக்கியுள்ளது டிரம்ப் செய்த மத்தியஸ்தம். ஆனால் அது தொடர, உலகமே காத்திருக்கிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news