நேற்றைய தினம் இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்திய ஈரான் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை பயன்படுத்தியதாகக் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அதாவது IRGC இந்த ஏவுகணைகளை இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவை குறிவைத்து ஏவியதாக தகவல்கள் சொல்கின்றன.
இதற்கும் முன்னரும் pahada-1 ரக ஏவுகணைகளை ஈரான் பயன்படுத்தியுள்ளது. அதாவது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் தேதி இஸ்ரேல் மீது ஒரு டஜன் pahada-1 ரக ஏவுகணைகளை வீசியது. ஆனால் தற்போது நடைபெற்று வரும் மோதலின் போது, இந்த ஏவுகணைகள் பயன்படுத்தப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ரக ஏவுகணைகளுக்கு ஈரானின் உச்ச தலைவர் அலி காமனெயியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. IRGC அமைப்பினர் இந்த ஏவுகணைகளை ‘இஸ்ரேல் ஸ்ட்ரைக்கர்’ என்று அழைக்கின்றனர். இந்த ஏவுகணைகள் அறிமுகம் செய்யப்பட்டபோது பிரமாண்ட பேனர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டன. ஹீப்ரூ மொழியில் அச்சிடப்பட்ட அந்த பேனர்களில், “400 நொடிகளில் டெல் – அவிவ்,” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
IRGC படையினர் இந்த ஏவுகணைகளை ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் என்று அழைக்கின்றனர். இருப்பினும் பாதுகாப்புத்துறை நிபுணர்கள், உண்மையாகவே இந்த ஏவுகணைகளுக்கு ஹைப்பர்சோனிக் தொழில்நுட்ப ஆற்றல் இருக்கிறதா என்று சந்தேகிப்பது முக்கியத்துவம் பெறுகிறது.