Tuesday, June 24, 2025

சந்தடி சாக்கில் ‘400 கிலோ’ யுரேனியத்தை பதுக்கிய ஈரான் எங்க போச்சு?

ஈரான் – இஸ்ரேல் இரு நாடுகளும் 12 நாட்களுக்கு பிறகு, போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டு இருக்கின்றன. இதனால் மத்திய கிழக்கில் ஏற்பட்ட பதட்டம் வெகுவாக தணிந்துள்ளது. இந்தநிலையில் தங்களிடம் இருந்த 400 கிலோ யுரேனியத்தை இஸ்ரேல், அமெரிக்கா நாடுகளின் கண்ணில் மண்ணைத்தூவி, ஈரான் பதுக்கி வைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை தடுக்கத்தான் இஸ்ரேல் அந்நாட்டின் மீது போர் தொடுத்தது. இஸ்ரேலுக்கு பக்கபலமாக களமிறங்கிய அமெரிக்காவும் வான்படை, கடற்படையைக் கொண்டு ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் மீதும், கடந்த ஜூன் 20ம் தேதி அதிரடி தாக்குதல் நடத்தியது. இதற்காக ‘பங்கர் பஸ்டர்’ என்னும் பதுங்கு குழி அழிக்கும் வெடிகுண்டுகளையும் அமெரிக்கா பயன்படுத்தியது.

13 ஆயிரத்து 600 கிலோ எடை கொண்ட இந்த குண்டு, 60 மீட்டர் ஆழம் வரை நிலத்தின் உள்ளேயும், 18 மீட்டர் தூரம் வரை கான்கிரீட் தளங்களையும் ஊடுருவிச் சென்று தாக்கும் திறன் படைத்தது. இவ்வளவு சக்தி வாய்ந்த குண்டுகளை பயன்படுத்தியும் கூட, ஈரானின் அணுசக்தி தளங்களை அமெரிக்காவால் முற்றிலும் அழிக்க முடியவில்லை. ஆனால் அமெரிக்காவின் இந்த தாக்குதலை முன்பே கணித்துவிட்ட ஈரானோ, தன் வசமிருந்த 400 கிலோ யுரேனியத்தையும் இரவோடு இரவாக, லாரிகளில் வைத்து வேறு பகுதிக்கு மாற்றிவிட்டது. ஃபோர்டோ என்னும் அணுசக்தி தளத்தில் இருந்து தான் இந்த யுரேனியம் மாற்றப்பட்டு உள்ளது. செயற்கைக்கோள் படங்களும் இதை உறுதி செய்துள்ளன. ஈரான் பதுக்கி வைத்திருக்கும் இந்த யுரேனியம் 60 சதவீதம் செறிவூட்டப்பட்டது.

இதை வைத்து ஒருமாத காலத்திற்குள், 10 அணு ஆயுதங்களை அந்நாட்டால் தயாரிக்க முடியும். ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க கூடாது என்றுதான் இஸ்ரேல் இந்த போரை தொடங்கியது. ஆனால் அமெரிக்கா களமிறங்கியும் கூட ஈரானின், அணு ஆயுத தயாரிப்பு முயற்சியை தடுத்து நிறுத்த முடியவில்லை. இந்த தகவலை அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் முக்கிய அதிகாரிகளும் ஒப்புக்கொண்டு இருக்கின்றனர்.

இஸ்ரேல் – ஈரான் இடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமாதான நடவடிக்கையை மேற்கொண்டதற்கு, இந்த பின்னடைவும் முக்கிய காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news