இஸ்ரேல் – ஈரான் போர் நிறுத்ததையடுத்து அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளின் தலைவர்கள் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் சொல்கின்றன. அப்போது இரு நாடுகளுக்கு இடையே அணுசக்தி தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இரண்டு நாடுகளிடமும் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது பற்றி கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ‘ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் என்பது தவிக்கமுடியாத ஒன்று’ என்று என கூறினார்.
இதற்கிடையே ஈரானிடம் 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. இதன் மூலம் 10 அணு ஆயுதங்களை ஈரான் நாட்டினால் தயாரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஈரான் அரசால் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒரு சில நாட்களுக்கு முன்பாக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் பத்திரப்படுத்தியதாகவும் தகவல்கள் கசிந்தன.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் அடுத்த வாரம் அமெரிக்க மற்றும் ஈரான் இடையே முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அப்போது இரு நாடுகளிடையே அணுசக்தி ஆயுதங்கள் குறித்து முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என்று தற்போது வெளிவந்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.