ஈரான் நாடாளுமன்றம் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதற்கான மசோதாவைத் தயார் செய்து வருவதாக ஈரானிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அணு ஆயுதப் போர் மூளுமா என்ற அச்சம் சர்வதேச அளவில் எழுந்துள்ளது.
ஈரான் நாடாளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்படும்போது அந்நாடு அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் அமைதியான அணுசக்திக்கான அதன் உரிமையை நிலைநிறுத்த உறுதியுடன் இருப்பதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஈரானிய அதிபர் Masoud Pezeshkian, “ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்க விரும்பவில்லை. ஆனால், அணுசக்தி மற்றும் ஆராய்ச்சிக்கான அதன் உரிமையைப் பின்பற்றும். பேரழிவு ஆயுதங்களுக்கு எதிரான உச்ச தலைவர் ஹயத்துல்லா அலி காமெனயின் மத ஆணையை பின்பற்றுவோம்” என்றார்.
அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் அதாவது NPT என்பது அணு ஆயுதங்கள் மற்றும் அவை தொடர்புடைய தொழில்நுட்பங்களின் பரவலைத் தடுக்க கொண்டுவரப்பட்டது. மேலும், அணுசக்தியை அமைதியான முறையில் பயன்படுத்துவதில் ஒத்துழைப்பை ஊக்குவிப்பது, அணு ஆயுதக் குறைப்பு மற்றும் முழுமையான உலகளாவிய ஆயுதக் குறைப்பு போன்ற இலக்கை நோக்கமாகக் கொண்ட ஒரு உலகளாவிய ஒப்பந்தம்.
நேற்று வரை, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நேற்று வரை 4-வது நாளாக போர் நீடித்தது. இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் அவ்வப்போது ஏவுகணைகளை வீசி வருகிறது. அதே நேரத்தில் ஈரான் தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட பகுதிகளை குறிவைத்த இஸ்ரேலின் தாக்குதல்களும் ஓயவில்லை.
இந்த பரபரப்புக்கு நடுவே அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து ஈரான் வெளியேற திட்டமிட்டு இருப்பது, உலக நாடுகளிடையே அணு ஆயுதப் போருக்கு வழிவகுக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.