நேபாளத்திற்கும் இந்தியாவுக்கும் இடையே முக்கியமாக எல்லைப் பிரச்சினை உள்ளது. உத்தரகாண்ட் எல்லையில் அமைந்துள்ள இந்திய பகுதிகளான காலாபனி, லிபுலேக் மற்றும் லிம்பியாதுரா பிராந்தியங்களை நேபாளம் சொந்தம் கொண்டாடி வருகிறது.
இந்த நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு நேபாளத்தின் அப்போதைய கே.பி.சர்மா ஒலி அரசு, இந்த பகுதிகளை இணைத்து வரைபடம் வெளியிட்டது. பின்னர், இதை அந்த நாட்டு பாராளுமன்றமும் அங்கீகரித்த நிலையில், இதனை அப்போது இந்தியா கடும் எதிர்ப்பை பதிவு செய்தது.
மேலும், ஒருதலைப்பட்சமான இந்த நடவடிக்கையை ஏற்க முடியாது என நேபாளத்துக்கு எச்சரிக்கையும் விடுத்தது. தற்போது இந்த பகுதிகளை உள்ளடக்கிய வரைபடத்துடன் புதிய 100 ரூபாய் நோட்டுகளை நேபாளம் வெளியிட்டு உள்ளது.
அதாவது, நேபாள ராஷ்டிர வங்கி வெளியிட்டுள்ள இந்த ரூபாய் நோட்டுகளால் இந்த விவகாரம் மீண்டும் பூதாகரமாகி இருக்கிறது. நேபாளத்தின் இந்த நடவடிக்கை இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
