Thursday, December 11, 2025

‘சீனாவை விட இந்தியா எங்களுக்கு மிக முக்கியம்!’ ஹூண்டாய் மோட்டார் தலைவர் முனோஸ் திட்டவட்டம்!

ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஜோஸ் முனோஸ், ‘சீனாவை விட இந்தியா எங்களுக்கு மிக முக்கியமான சந்தை’ என்று தெரிவித்துள்ளார். இந்தியாவை அமெரிக்காவிற்குப் பிறகு உலகின் இரண்டாவது பெரிய சந்தையாக உருவாக்கும் நோக்கில், ஹூண்டாய் 2030-ம் ஆண்டிற்குள் ரூ.45,000 கோடி முதலீடு செய்து 26 புதிய மாடல்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

மும்பையில் நடைபெற்ற முதலீட்டாளர் தின நிகழ்ச்சியில் பேசிய அவர், கடந்த பத்து ஆண்டுகளில் உலகம் “உலகமயமாக்கல்” நிலையிலிருந்து “உள்நாட்டுமயமாக்கல்” நோக்கி நகர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டார். ‘இந்தியா ஒரு வளர்ந்து வரும் வலிமையான உள்நாட்டு சந்தையாக மட்டுமல்ல, எதிர்காலத்தில் ஒரு பெரிய ஏற்றுமதி மையமாக மாறும் திறன் கொண்டது. இதற்காக உற்பத்தித் திறன், தொழில்நுட்பம் மற்றும் உள்நாட்டுமயமாக்கலில் முதலீடு அவசியம்’ என முனோஸ் கூறினார்.

சுங்க வரிகள் குறித்து அவர், ‘அவை எப்போதுமே இருந்தன, ஆனால் இப்போது அவை அடிக்கடி மாறிக் கொண்டிருக்கின்றன. இது சவாலாக இருந்தாலும், ஹூண்டாய்க்கு இது ஒரு போட்டி நன்மையாக மாறும்’ என தெரிவித்தார்.

மேலும், ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் தற்போதைய தலைமை இயக்க அதிகாரி தருண் கார்க், ஜனவரி 1, 2026 முதல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் சி.இ.ஓ-வாகப் பொறுப்பேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் இந்தியாவில் தொடங்கப்பட்டதிலிருந்து இப்பதவியை வகிக்கும் முதல் இந்தியர் இவர்.

மின்சார வாகனங்களுக்கான உலகளாவிய தேவை எதிர்பார்த்த அளவில் வளரவில்லை என்பதால், ஹூண்டாய் தனது கவனத்தை ஹைப்ரிட் (Hybrid) வாகனங்களுக்குச் செலுத்தி வருகின்றது. இந்தியாவில் மற்ற எந்த பிராண்டையும் விட அதிகமான எட்டு ஹைப்ரிட் மாடல்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தையும் முனோஸ் உறுதிப்படுத்தினார். ‘இந்த வியூக மாற்றம் இந்திய சந்தைக்கு பெரும் நன்மை அளிக்கும்,’ என்றும் அவர் கூறினார்.

Related News

Latest News