‘டிராஃபிக் ஜாம் தொல்ல தாங்க முடியல சார்’ – 6 வயது சிறுவன் போலீசில் புகார்

266
Advertisement

ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள பலமனேர் காவல் நிலையம் எப்போதும் போல பல்வேறு வழக்குகள் தொடர்புடையவர்களிடம் விசாரணை, சண்டை சச்சரவு வழக்குகளில் சமரச முயற்சி என போலீஸார் இயங்கிக் கொண்டிருக்க, பள்ளிச் சீருடையுடன் 6 வயது சிறுவன் ஒருவன் அந்தக் காவல் நிலையத்துக்குள் நுழைந்து நேரடியாக இன்ஸ்பெக்டர் அறைக்குள் அந்த சிறுவன் திடீரென நுழைய  இன்ஸ்பெக்டர் பாஸ்கர், அந்த சிறுவனை உட்கார வைத்து, எதற்காக காவல் நிலையம் வந்திருக்கிறாய், யாருடன் வந்திருக்கிறாய் என கேட்க. அதற்கு பதிலளித்த சிறுவன், தனது பெயர் கார்த்திக் என்றும், ஒரு புகார் அளிக்க வந்திருப்பதாகவும் கூறி, தான் பள்ளிக்கு செல்லும் போது எப்போதுமே கடுமையான போக்குவரத்து நெரிசல் இருப்பதாகவும், வழிநெடுக டிராக்டர்கள் நிற்பதும், சாலையில் பள்ளம் தோண்டியிருப்பதுமே இதற்கு காரணம் எனக் கூறியுள்ளான்.

மேலும், உடனடியாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கூறிய அச்சிறுவன், “வாருங்கள் அந்த இடத்தை இப்போதே காட்டுகிறேன்” என மழலை கொஞ்சும் மொழியில் கூறியிருக்கிறான்.சிறுவனின் தைரியத்தையும், அவனது தெளிவான பேச்சையும் கண்டு ஆச்சரியம் அடைந்த இன்ஸ்பெக்டர் பாஸ்கர், அவனை மனமார பாராட்டினார். பின்னர், போக்குவரத்து நெரிசலுக்கு விரைவில் தீர்வு காண்பதாக சிறுவனிடம் இன்ஸ்பெக்டர் உறுதி அளித்தார். இதையடுத்து, காவலர்கள் இரண்டு பேரை அழைத்து, அந்த சிறுவனை பத்திரமாக பள்ளிக்கூடத்தில் விட்டுவிடுமாறு கூறி அவனை அனுப்பி வைத்துள்ளர்.பிறகு, அந்த சிறுவனிடம் தான் நடத்திய உரையாடலை இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி, சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.