உத்தரபிரேதச மாநிலம் காசியாபாத் பகுதியை சேர்ந்தவர் சிவம் உஜ்வால். அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு ஷானவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இவர் தனது மனைவி சினிமா நடிகை நோரா பதேகி போல் கட்டுடலாக உடலமைப்பை பெற வேண்டும் என்பதற்காக மனைவி ஷானவியை தினமும் 3 மணி நேரம் உடற்பயிற்சி செய்ய கட்டாயப்படுத்தி வந்துள்ளார். கணவனின் வற்புறுத்தலால் ஷானவி தினமும் உடற்பயிற்சி செய்து வந்தார்.
உடற்பயிற்சி செய்ய தவறினாலும், அவருக்கு சாப்பாடு தராமல் பட்டினி போட்டார். கையில் கிடைத்த பொருட்களால் அவரை அடித்துள்ளார். மேலும் உடலளவிலும், மனதளவிலும் அவரை துன்புறுத்தி சித்ரவதை செய்து வந்துள்ளார். தன் கணவன் செய்யும் இந்த கொடுமைகளால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த அவரை மாமியார் கூடுதலாக வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால் பொறுமையிழந்த ஷானவி அந்த வீட்டிலிருந்து வெளியேறினார். தனக்கு நடந்த கொடுமைகளை பெற்றோரிடம் சொல்லி அழுதார்.
இந்த சம்பவம் குறித்து அப்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.