ஒலிம்பிக் போட்டியில் பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம்
வென்றுள்ள இந்திய சாதனை நங்கை மீராபாய் சானு இரண்டாண்டுகளுக்குப்
பிறகு வீட்டுச் சாப்பாட்டை சாப்பிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது-
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதற்காக கடுமையான உணவுக்
கட்டுப்பாட்டை மீராபாய் சானு கடைப்பிடித்து வந்தார். அதில் அவருடைய
விருப்பமான உணவுகளைத் தவிர்த்ததும் அடங்கும்.
போட்டிக்குத் தயாராவதற்காக வீட்டைவிட்டு வெகுதொலைவில் பயிற்சி
மையத்தில் தங்கியிருந்தது; துரித உணவு, நொறுங்குத் தீனி போன்றவற்றைத்
தவிர்த்தது; இறுதிப் போட்டிக்கு இரண்டு நாட்களுக்குமுன் எந்த உணவும்
சாப்பிடாதது உள்ளிட்ட தியாகத்தைச் செய்து மாபெரும் வரலாற்றுச் சாதனையை
நிகழ்த்தி இந்தியாவை உலக அரங்கில் தலைநிமிரச் செய்தார். பெண்ணினத்துக்கும்
தன் பெற்றோருக்கும் பெருமை தேடித் தந்தார்.
தன் லட்சியம் நிறைவேறிவிட்ட பூரிப்பில் மணிப்பூரிலுள்ள தங்கள் வீட்டில்
சமைத்த அரிசிச் சோறு, காய்கறிக் கூட்டு, கிரேவி, சாம்பார், ரசம் ஆகியவற்றைத்
தட்டில் இட்டு, தரையில் அமர்ந்து உண்டு அளவற்ற ஆனந்தம் அடைந்துள்ளார்.
வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தாலும் மிகப்பணிவோடு எளிமையாகத்
தரையில் அமர்ந்து சாப்பிட்டு புன்னகைப் பூக்கும் இந்தியாவின் சாதனைப்
பெண்மணி சானுவை அனைவரும் வாழ்த்தி மகிழ்ந்தனர்.