மணிப்பூரில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் தலைநகர் இம்பால் உட்பட பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள கக்வா, தங்கமைபந்த் மற்றும் சாகோல்பந்த் பகுதிகளில் கடுமையான நீர் தேக்கம் காரணமாக வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
முக்கிய ஆறுகளின் நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக நீர்மட்டம் உயர்ந்து காணப்படும் சக்பி ஆற்றங்கரைகளுக்கு அருகில் குளிக்கவோ அல்லது மீன்பிடிக்கவோ வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை வரை கனமழை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.