உடற்பயிற்சி ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், திடீரென கடின உடற்பயிற்சியில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். இதய நோய், சர்க்கரை நோய், அதிக ரத்த அழுத்தம், அதிக உடல் எடை, சீரற்ற இதய துடிப்பு உள்ளவர்கள், இதயத் தசைகள் வலுவிழந்தவர்கள் மிகக் கடின உடற்பயிற்சிகளை திடீரென்று அதிக நேரம் செய்யும் போது மாரடைப்பு ஏற்பட வாய்ப்புண்டு.
கடின உடற்பயிற்சியின் போது இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம், அட்ரினலின் சுரப்பு அதிகரிக்கும். உடலில் பொட்டாசியம், மெக்னீசியம், சோடியம் போன்ற எலெக்ட்ரோலைட் சத்துக்கள் குறைவதால் இதய செயல்பாடு பாதிக்கப்படும்.
கடின உடற்பயிற்சி செய்யும் முன் ‘வார்ம் அப்’ செய்ய வேண்டும். உடற்பயிற்சி நேரத்தை மெதுவாக அதிகரிக்க வேண்டும். உடற்பயிற்சிக்கு முன்பும் பின்பும் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும்.
உடற்பயிற்சியின் போது நெஞ்சு இறுக்கம், மூச்சுத் திணறல், மயக்கம் ஏற்பட்டால் உடனே நிறுத்தி மருத்துவ உதவி பெற வேண்டும்.