மாணவிகளுக்கு ஹாப்பி நியூஸ்.. மாதவிடாய் விடுப்பு பற்றிய முழுத் தகவல்…!

213
Advertisement

மாதந்தோறும் மாதவிடாய் காலங்களில் வயிற்று வலி, தலைவலி, உடல் சோர்வு, எரிச்சல் மற்றும் பல உடல் உபாதைகளால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.

ஜப்பான், தென் கொரியா, தைவான், இந்தோனேசியா, ஸ்பெயின் போன்ற நாடுகளில் மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு விடுப்பு வழங்கினாலும், இந்தியாவில் இது போன்ற நடைமுறை இல்லை.
பல முற்போக்கான திட்டங்களில் முன்னோடியாக திகழும் கேரள மாநிலம், மாதவிடாய் விடுப்பு விவகாரத்திலும் புதிய மயில்கல்லை எட்டியுள்ளது. 1912ஆம் ஆண்டு முதல் எர்ணாகுளம் மாவட்டம் திருப்பூனித்துராவில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில், ஆண்டுத்தேர்வின் போது கூட மாணவிகள் ‘பீரியட் லீவ்’ எடுத்து விட்டு, பிறகு தேர்வு எழுதிக் கொள்ளலாம் என்ற நடைமுறை உள்ளது. ஆனால் மற்ற பள்ளி மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இதுவரை அப்படி ஒரு நடைமுறை கிடையாது.


இந்நிலையில், கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிகளின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது. பல்கலைக்கழகத்தில் பொதுவாக 75% வருகைப்பதிவேடு, மாதவிடாய் விடுப்புக்கு தடையாக இருப்பதால் 2% விலக்கு அளிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.


பல்கலைக்கழக நிர்வாகம் கோரிக்கையை ஏற்றதன் மூலம் 4000க்கும் மேற்பட்ட பெண்கள் பயன்பெறுவார்கள் எனக் கூறியுள்ள மாணவர் சங்கத் தலைவர் நமீதா ஜார்ஜ், இது உயர்கல்வி துறையில் எடுக்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த அதேவேளையில் மிகவும் தேவையான முடிவு எனக் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் இயங்கும் ஸ்விக்கி, சோமேட்டோ, பைஜூஸ், மாத்ருபூமி எனும் மலையாள இதழ் போன்ற தனியார் நிறுவனங்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்குவது குறிப்பிடத்தக்கது.