Thursday, January 15, 2026

கந்துவட்டிக்கு goodbye., அடமானம் இல்லாமல் கடன்… அரசின் அதிரடி சட்டம்

சின்னதா ஒரு கடை வைக்கணும், ஒரு தொழில் தொடங்கணும்னு ஆசைப்படுற ஒவ்வொருத்தருக்கும், தமிழக அரசு ஒரு சூப்பர் குட் நியூஸை அறிவித்துள்ளது. இனி, நான்கு லட்சம் ரூபாய் வரை கடன் வாங்குவதற்கு, நீங்கள் எந்தவிதமான சொத்துப் பத்திரத்தையோ, அல்லது வேறு எந்த அடமானத்தையோ கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை. இது, ஏழை எளிய மக்களின் வாழ்வில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகும் ஒரு புரட்சிகரமான அறிவிப்பாகப் பார்க்கப்படுகிறது.

கந்துவட்டிக்காரர்களிடம் சிக்கி, சொத்தை இழக்கும் கொடுமைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழக அரசு, ‘தமிழ்நாடு கடன் வழங்கும் நிறுவனங்கள் (கடுமையான நடவடிக்கைகளைத் தடுத்தல்) விதிகள், 2025’ என்ற ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டம், கடந்த நவம்பர் 19-ஆம் தேதியே அமலுக்கு வந்துவிட்டது. இதன் மூலம், இனி ஒரு தையல் கடை வைப்பதாக இருந்தாலும் சரி, ஒரு டிபன் சென்டர் ஆரம்பிப்பதாக இருந்தாலும் சரி, இல்லைன்னா ஒரு பைக் வாங்கி வாடகைக்கு ஓட்டுவதாக இருந்தாலும் சரி, யார் வேண்டுமானாலும் எந்தவிதமான அடமானமும் இல்லாமல், சுலபமாகக் கடன் பெற முடியும்.

அதுமட்டுமல்ல, சுய உதவிக் குழுவில் இருக்கும் பெண்களுக்கு ஒரு பெரிய ஜாக்பாட்டே அடித்திருக்கிறது. அவர்கள், பத்து லட்சம் ரூபாய் வரை கடன் வாங்குவதற்கு, எந்தவிதமான சொத்துப் பத்திரமும் கேட்கக்கூடாது என்றும் இந்த புதிய சட்டம் சொல்கிறது. மேலும், கடன் கொடுத்தவர்கள் இனிமேல் ஆட்டம் போட முடியாது. கடன் முழுசா கட்டி முடித்த 30 நாட்களுக்குள், நீங்கள் கொடுத்த சொத்துப் பத்திரம், அடமானப் பத்திரம் என எல்லாத்தையும் மரியாதையாக உங்களிடம் திருப்பிக் கொடுத்தாக வேண்டும்.

இந்த புதிய சட்டத்தின்படி, கடன் கொடுக்கும் ஒவ்வொரு நிறுவனமும், தங்கள் ஆண்டு அறிக்கையை, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள், அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதன் மூலம், அவர்களின் வரவு செலவுகளை அரசால் கண்காணிக்க முடியும். இந்த வெளிப்படைத்தன்மை, சட்டவிரோதக் கடன் நடவடிக்கைகளுக்கு ஒரு பெரிய தடையாக அமையும்.

மொத்தத்தில், இந்த புதிய சட்டம், ஏழை எளிய மக்களைக் கந்துவட்டிக் கொடுமையிலிருந்து காப்பாற்றுவதோடு, லட்சக்கணக்கான சிறு தொழில்முனைவோர்களை, குறிப்பாகப் பெண்களை, தங்கள் சொந்தக் காலில் நிற்க வைக்கும் ஒரு பெரிய படிக்கல்லாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Related News

Latest News