Friday, August 1, 2025

கிராமப்புற மக்களுக்கு குட் நியூஸ்.. முக்கியமான ‘இந்த’ அரசு உத்தரவு ரத்து

தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து வணிகம் அல்லது தொழில் உரிமம் வழங்குவதற்கான விதிகள் 2025 என்ற சட்டத்தை கடந்த சட்டமன்ற கூட்டத்தில் தமிழக அரசு நிறைவேற்றியது. இதற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இந்த சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின் படி கிராம பஞ்சாயத்து பகுதிகளில் வணிகம் அல்லது தொழில் செய்பவர்கள் இனி அதற்குரிய கட்டணத்தை செலுத்தி லைசென்ஸ் பெற வேண்டும்.

இந்த நிலையில், இந்த அறிவிப்புக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து இருந்தார். அவருக்கு பதில் அளிக்கும் வகையில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டுள்ளார். அதில் ,தொழில் உரிமம் பெறுவதற்கான சட்டப்பிரிவு பல ஆண்டுகளாக இருந்த போதும் முறையான விதிகள் இல்லாததால் ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் தங்களது தீர்மானத்தின் அடிப்படையில் பல்வேறு விதமான கட்டணங்கள் நிர்ணயம் செய்து அதிக அளவில் கட்டணங்களை வசூலித்து வந்தன. இந்த குறைகளை நீக்கும்பொருட்டு பல்வேறு வணிகர்களின் கோரிக்கைகளை ஏற்று இப்போது புதிதாக விதிகள் உருவாக்கப்பட்டு அறிவிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. அரசு எப்போதும் ஏழை எளிய மக்களின் குறிப்பாக வணிகர்களுக்கு துணைநிற்கும் அரசாகும். வணிகர் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியுள்ள திராவிட மாடல் அரசின் நல்லெண்ணத்தின் மீது பழிபோட பழனிசாமி பகல் கனவு காண வேண்டாம். இந்த நிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக உரிமம் பெறுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்துவது குறித்து கோரிக்கை மனுவை முதலமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளனர்.

அதில் லைசென்ஸ் விவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக துறை அலுவலர்கள் மற்றும் வணிகர் சங்க அமைப்புகளின் பிரதிநிதிகளை கொண்ட ஆலோசனைக் குழு ஒன்றை அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்தக்குழு, கிராமப்புறங்களில் சிறு வணிகர்கள் வணிக உரிமம் பெறுவது குறித்த நடைமுறையை எளிமைப்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு பரிந்துரைகளை வழங்கும். அதன் அடிப்படையில் புதிய சட்டத்தை நடைமுறைபடுத்துவது குறித்து முடிவு மேற்கொள்ளப்படும்.என்று கூறியுள்ளார்.

இந்த சூழலில்,கிராமங்களில் தொழில் செய்ய லைசென்ஸ் வாங்க வேண்டும் என்ற அரசு உத்தரவு ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆலோசனை குழு அறிக்கை சமர்ப்பித்த பிறகு இதில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News