இலவச வேர்க்கடலை.. அமெரிக்காவிலிருந்து வந்த சகோதர,சகோதரி

423
Advertisement

https://www.instagram.com/p/CYQ0WDfqJQ4/?utm_source=ig_web_copy_link

இலவச வேர்க்கடலை வழங்கிய விவசாயியைப் பார்ப்பதற்காக அமெரிக்காவிலிருந்து இருவர் இந்தியா வந்த விஷயம் பரபரப்பாகியுள்ளது.

அன்பும் கருணையுமே உண்மையான மனிதப் பண்புகள். அதை நிரூபிக்கும் சம்பவம் ஒன்று சமீபத்தில் நிகழ்ந்துள்ளது.

அமெரிக்க வாழ் இந்தியர்களான நேமானி பிரணவ், சகோதரி சுசிதா இருவரும் தங்கள் தந்தை மோகனுடன் ஆந்திராவிலுள்ள யு. கொத்தப்பள்ளி கடற்கரையைப் பார்ப்பதற்காக 2010 ஆம் ஆண்டில் வந்தனர். அப்போது அங்கிருந்த கிஞ்சால பெத்த சாத்தையா என்ற கடலை வியாபாரியிடம் வேர்க்கடலை வாங்கினார்கள்.

ஆனால், அவர்கள் கையில் ரொக்கமாகப் பணம் இல்லை என்பதால், பணம்கொடுக்க அவர்களால் முடியவில்லை.

அவர்களின் நிலையைப் புரிந்துகொண்ட சாத்தையா, பரவாயில்லை… நான் அன்பளிப்பாக தந்ததாக இருக்கட்டும் என்று பெருந்தன்மையாகக் கூறினார்.

அதனை ஏற்றுக்கொண்ட அவர்கள் பணத்தைப் பின்னர் தருவதாக உறுதியளித்து, தங்களிடமிருந்த கேமராவில் சாத்தையாவைப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
அமெரிக்கா சென்றபிறகு அனுப்பி வைப்பதாகக் கூறிய அவர்களால் உடனடியாகப் பணத்தை அனுப்பிவைக்க முடியவில்லை.

இந்த நிலையில், ஏறத்தாழ 11 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்காவில் பட்டப்படிப்பு படிக்கும் 21 வயதான பிரணவும் அவரது சகோதரியும் இந்தியாவுக்கு வந்தனர். கிஞ்சால பெத்த சாத்தையாவைத் தேடினர். அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

அவர்களின் தந்தை மோகன் தனது நண்பரான காக்கிநாடா எம்எல்ஏவைத் தொடர்புகொண்டு, முன்பு எடுத்த சாத்தையாவின் புகைப்படத்தை பேஸ்புக்மூலம் அனுப்பினார். அந்த எம்எல்ஏ தனது உதவியாளர்மூலம் சாத்தையாவின் குடும்பத்தைக் கண்டறிந்தார்.

அப்போது, சாத்தையா உயிருடன் இல்லை. அவரது குடும்பத்தினர் மட்டுமே இருந்தனர். அவர்களிடம் 25 ஆயிரம் ரூபாய் வழங்கி தங்களின் வேர்க்கடலைக் கடனை அடைத்துள்ளனர்.

இந்தச் செயல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.