திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கணக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பழனியப்பன். 55 வயதான கட்டிட தொழிலாளியான இவருக்கு விஜயா என்ற மனைவியும், கார்த்திகா, தனலட்சுமி என்ற இரு மகள்கள் உள்ளனர். இதில் கார்த்திகாவுக்கு திருமணம் ஆகிவிட்டது. தனலட்சுமிக்கு திருமணம் ஆகவில்லை.
தனலட்சுமிக்கு சில உடல் நல பிரச்சினைகள் இருப்பதாகவும் அதன் காரணமாகவே திருமணம் நடைபெறவில்லை என சொல்லப்படுகிறது. தனது மகளுக்கு திருமணமாகாததால் கடந்த சில நாட்களாகவே பழனியப்பன் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனலட்சுமியை கயிற்றால் கழுத்தில் இறுக்கி பழனியப்பன் கொலை செய்துவிட்டு, அதே கயிற்றால் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனலட்சுமிக்கு மணப்பெண் போல அலங்காரம் செய்யப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டு இறுதி சடங்கு செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து இருவரின் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.