அசாமில், 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு அறுவை சிகிச்சை வாயிலாக பிரசவம் பார்த்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.
அசாம் மாநிலம் சில்சாரில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனைகளில் மகப்பேறு மருத்துவராக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்த புலோக் மலகார் மீது சமீபத்தில் புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து அவரது சான்றிதழ்களை போலீசார் ஆய்வுக்கு உட்படுத்தியபோது, அவை அனைத்தும் போலியானவை என்பது தெரியவந்தது.
இதையடுத்து, சில்சாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு, மகப்பேறு அறுவை சிகிச்சை செய்தபோது, புலோக் மலகாரை போலீசார் கைது செய்தனர். அசாமின் ஸ்ரீபூமி பகுதியைச் சேர்ந்த இவர், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்., திரைப்படத்தைப் போல் போலி மருத்துவராக நடித்ததுடன், தன் பணிக்காலத்தில் 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணியருக்கு சிசேரியன் முறையில் பிரசவம் பார்த்தது அம்பலமாகியுள்ளது.
இதைத்தொடர்ந்து புலோக் மலகார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு, அவரை ஐந்து நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.