மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் : “தமிழகத்தில் தமிழ் மொழி வாயிலாக கற்க வேண்டும் என்பதை தான் புதிய தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. 3-வது மொழியாக, எந்த மொழியில் வேண்டுமென்றாலும் கற்றுக் கொள்ளலாம்.
புதிய தேசிய கல்விக் கொள்கையில் எந்த மொழியும் திணிக்கப்படவில்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை அனைத்துமே அரசியலாக்கப்படுகிறது. இந்தி திணிக்கப்படவில்லை என்பதே உண்மையான விஷயம். அதற்காக போராட்டம் நடத்தப்பட வேண்டியதில்லை என நான் நினைக்கிறேன்.
புதிய தேசிய கல்விக் கொள்கை தமிழகத்திற்கு மட்டும் வருவது இல்லை, அனைத்து மாநிலத்திற்கும் வரக் கூடிய ஒன்று. யார் மீதும் எந்த மொழியும் திணிக்கப்பட கூடாது என்பது தான் புதிய தேசிய கல்விக் கொள்கை. இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டி அரசியல் செய்வது தமிழகத்தில் வாடிக்கையாக இருக்கிறது”
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.