அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் சட்டமன்ற தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி நேற்று வேலூர் மாவட்டம், அணைக்கட்டு எம்.ஜி.ஆர். சிலை அருகே ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேச தொடங்கினர். அப்போது கூட்டத்திற்கு நடுவே அம்புலன்ஸ் ஒன்று வந்துள்ளது. இதை பார்த்து கோபம் அடைந்த அவர், தி.மு.க. அரசு வேண்டும் என்றே ஒவ்வொரு கூட்டத்திலும் இது போன்ற நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ்களை விட்டு இடையூறு செய்வதாக குற்றம் சாட்டினார்.
இந்த ஆம்புலன்சில் நோயாளி இல்லை. இது திமுக அரசின் கேவலமான செயல். நான் பேசிய 30 கூட்டங்களிலும் ஆம்புலன்ஸ்களை இடையூறாக விட்டு உள்ளனர். அடுத்த கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வந்தால் அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அதில் நோயாளியாக மருத்துவமனைக்கு செல்வார் என எச்சரித்தார்.
எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சுக்கு தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமான அவரது பேச்சிற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். மன்னிப்பு கேட்கத்தவறும் பட்சத்தில் அவருக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.