மதுரை கோட்ட ரயில்வே பகுதி, கொடைரோடு-சமயநல்லூர் இடையேயான ரயில் பாதையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து கொண்டிருப்பதால், அந்த வழியாக செல்லும் சில ரயில்களின் பாதையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
ஈரோடு-செங்கோட்டை பாசஞ்சர் ரயில்வருகிற 27-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை திண்டுக்கல் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். மறுமார்க்கத்தில் செங்கோட்டை-ஈரோடு பாசஞ்சர் ரயில் வருகிற 28-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து வழக்கமான நேரத்துக்கு ஈரோடு புறப்பட்டு செல்லும்.
திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து ஈரோடு வரையிலும், மற்றும் மதுரை ரயில் நிலையத்திலிருந்து செங்கோட்டை வரையிலும் சிறப்புக் கட்டண ரயில்கள் இயக்கப்படும். செங்கோட்டையில் இருந்து அதிகாலை 5.10 மணிக்கு புறப்பட்டு காலை 9.30 மணிக்கு மதுரை ரயில் நிலையம் சென்று அடையும். மறுமார்க்கத்தில் சிறப்பு ரயில், மதுரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும்.
செங்கோட்டையில் இருந்து மதுரை வழியாக மயிலாடுதுறை வரை செல்லும் ரயில் வருகிற 28-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை, காரைக்குடி வழியாக திருச்சி செல்லும். இந்த ரயில் அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை ரோடு, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 28-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி செல்லும். இந்த ரயில் அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
குருவாயூரில் இருந்து மதுரை வழியாக சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 27-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி செல்லும்.
கன்னியாகுமரி-ஹவுரா, மற்றும் கன்னியாகுமரி-ஐதராபாத் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 29, 30 தேதிகளில் விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.