ராஜஸ்தானில் வரதட்சணை கொடுமையால் ஆசிரியை தனது மகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் சர்நடா கிராமத்தை சேர்ந்தவர் திலீப் பிஷோனி. இவருக்கும் சஞ்சு பிஷோனி என்பவருக்கும் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 3 வயதில் யாஷ்வி என்ற மகள் இருந்தார்.
பிட்கன்சி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் சஞ்சு ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே, சஞ்சுவுக்கும் அவரது கணவர் திலீப்பிற்கும் இடையே குடும்ப பிரச்சினை நிலவி வந்ததாக தெரிகிறது. மேலும், சஞ்சுவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு அவரது மாமனார், மாமியார் கடந்த 5 மாதங்களுக்குமேல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த சஞ்சு தனது மகளுடன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.
இந்த சம்பவத்தில் மகள் யாஷ்வி சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். சஞ்சுவின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து சென்ற அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமத்தனர். படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சஞ்சு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.