இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தற்போது முதல் டெஸ்ட் போட்டியில் ஆடி வருகிறது. முதல் இன்னிங்சில் ஜெய்ஸ்வால், கில், ரிஷப் மூவரும் சதமடித்தனர். இதனால் இந்தியா 471 ரன்களை எடுத்தது.
இதையடுத்து தன்னுடைய முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்தும், அதிரடியாக ஆடி 465 ரன்களை குவித்தது. இதன் காரணமாக முதல் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது 2வது இன்னிங்சை ஆடிவரும் இந்தியா, இங்கிலாந்தை காட்டிலும் 96 ரன்கள் முன்னிலை வகித்து வருகிறது.
ராகுல் 47 ரன்களுடனும், அவருக்கு உறுதுணையாக கேப்டன் கில் 6 ரன்னுடனும் களத்தில் நிற்கின்றனர். முதல் இன்னிங்சில் சதமடித்து அசத்திய ஜெய்ஸ்வால், 2வது இன்னிங்சில் விரைவாக விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். இதனால் ராகுல், கில் இருவரும் இணைந்து 2வது இன்னிங்சை கட்டமைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர்.
இந்தநிலையில் இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, கேப்டன் சுப்மன் கில்லுக்கு அட்வைஸ் ஒன்றை வழங்கி இருக்கிறார். இதுகுறித்து அவர், ” தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பேச்சை கேட்காமல், பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கை முதல் டெஸ்ட் போட்டியில், சுப்மன் கில் விளையாட வைத்திருக்க வேண்டும்.
அவர் இடதுகை பந்துவீச்சாளர் என்பதால் வேறுவிதமான வேரியேஷனில் பந்து வீச முடியும். என்னைக் கேட்டால் ஒரு கேப்டனாக கில் சுதந்திரமாக முடிவெடுக்க வேண்டும். பிளேயிங் லெவன் விஷயத்தில் அவர் கம்பீரின் பேச்சை கேட்கக்கூடாது,” என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
பந்துவீச்சாளர்களில் பும்ரா தவிர்த்து வேறு யாருமே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. சிராஜ், பிரசித் கிருஷ்ணா இருவரும் விக்கெட்களை வீழ்த்தினாலும், அதிக ரன்களை விட்டுக் கொடுக்கின்றனர். இதனால் பும்ராவிற்கு கூடுதல் சுமை ஏற்படுகிறது. இதை மனதில் வைத்துத்தான் கங்குலி, கில்லுக்கு அட்வைஸ் வழங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.