தீபாவளி பண்டிகை அக். 20-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதைத்தொடர்ந்து, பட்டாசு, ஜவுளி வியாபாரம் விறுவிறுப்பு அடைந்துள்ளது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக பட்டாசுக் கடைகள் ஆங்காங்கு திறக்கப்பட்டு வருகின்றன. பட்டாசு கடைகளில் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கும் வகையில், தற்காலிக பட்டாசுக் கடைகள் வைப்பதற்குரிய கடுமையான விதிமுறைகளை தீயணைப்புத் துறை அமல்படுத்தியுள்ளது.
பட்டாசு கடைகளை ஒழுங்குபடுத்துவதற்காக தீயணைப்புத் துறை இயக்குநரும், DGP-மான சீமா அகா்வால் மாநிலம் முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே சுற்றறிக்கை அனுப்பினாா். அதில் பட்டாசுக் கடைகள் வைப்பதற்கு வெடிபொருள் சட்டத்தின்படி பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் போன்ற நேரடியாக ஆய்வு செய்த பின்னா் தடையில்லாச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
தற்காலிக பட்டாசுக் கடை விற்பனை உரிமம் கேட்பவா்கள் தீயணைப்புத் துறை, உள்ளாட்சி நிா்வாகம், காவல் துறை ஆகியோரிடம் இருந்து தடையில்லாச் சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். இந்த நிலையில், இந்த ஆண்டின் தீபாவளியை முன்னிட்டு பட்டாசுக் கடைகள் வைப்பதற்கு தீயணைப்புத் துறைக்கு 9,549 விண்ணப்பங்கள் வந்த நிலையில், இதில் 6,630 விண்ணப்பங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 2,499 விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருக்கிறது. இந்த விண்ணப்பங்கள் அடிப்படையில் கள ஆய்வு செய்யப்பட்டு, ஓரிரு நாள்களில் முடிவு எடுக்கப்படும் என தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.
போதிய பாதுகாப்பு வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படவில்லை என 681 விண்ணப்பங்களை தீயணைப்புத் துறை நிராகரித்துள்ளது. ‘கடந்த ஆண்டைக் காட்டிலும், அதிகளவு அதிக அளவில் பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி வழங்கக் கோரி விண்ணப்பங்கள் வந்துள்ள நிலையில், இன்னும் விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருப்பதால், பட்டாசுக் கடைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக’ தீயணைப்புத் துறையைச் சோ்ந்த உயா் அதிகாரி தெரிவித்தாா்.
