கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயது செவிலியரான நிமிஷா பிரியா, 2008 ஆம் ஆண்டு ஏமன் தலைநகர் சனாவுக்கு குடிப்பெயர்ந்தார்.
அதன்பின்னர், அந்த நாட்டை சேர்ந்த தலால் அப்து மஹதியுடன் இணைந்து சிறிய மருத்துவமனை ஒன்றை தொடங்கி, நடத்தி வந்த நிலையில், போதிய வருமானம் இல்லாததால், நிமிஷாவின் நகைகள், மருத்துவமனையின் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவற்றைப் பறித்து, மஹதி அவரை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
2017 ஆம் ஆண்டில் மஹதிக்கு மயக்க மருந்து கொடுத்து தனது பாஸ்போர்ட்டை மீட்க நிமிஷா முற்பட்டபோது அதிகமான மயக்க மருந்து செலுத்தியதால் மஹதி உயிரிழந்தார். மஹதியை கொலை செய்த வழக்கில் குற்றவாளியாகத் தீா்ப்பளிக்கப்பட்டு, நிமிஷாவுக்கு இந்த மரண தண்டனை நிறைவேற்றப்படவிருந்தது.
இந்த நிலையில், தொடர் முயற்சிகளின் காரணமாக நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏமன் தலைநகர் சனாவில் நடைபெற்ற உயர்நிலைக் குழு கூட்டத்தில், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மரண தண்டனையை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.