திருமணம் ஆகாத மகள் பெற்றோரிடமிருந்து திருமணச்செலவைப் பெறலாம்

260
Advertisement

திருமணம் ஆகாத போதும் பெற்றோரிடமிருந்து திருமணச்செலவுகளை
மகள் உரிமை கோர முடியும் என்று சதீஷ்கர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சதீஷ்கர் மாநிலம், துர்க் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இராஜேஸ்வரி. 35வயதாகும்
இந்தப் பெண்ணின் தந்தை பானுராம். இவர் பிலாய் ஸ்டீல் நிறுவனத்தில் பணி
புரிந்து வருகிறார். இவர் துர்க் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல்
செய்திருந்தார்.

அந்த மனுவில், ”எனக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை. என் தந்தை விரைவில்
ஒய்வுபெற உள்ளார். அவருக்கு ஓய்வுக்காலப் பணப்பலன்களாக 55 லட்ச ரூபாய்க்கு
மேல் வர உள்ளது. அதிலிருந்து திருமணச்செலவாக எனக்கு 20 லட்சம் வழங்க உத்தர
விட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

‘தந்தையிடமிருந்து திருமணச்செலவைக் கேட்க மகளுக்கு உரிமையில்லை’ என்றுகூறி
இந்த மனுவை துர்க் மாவட்டக் குடும்ப நல நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து இராஜேஸ்வரி சதீஷ்கர் மாநிலப் பிலாஸ்பூரிலுள்ள உயர்நீதிமன்றக்
கிளையில் மனுத் தாக்கல்செய்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கௌதம் பாதுரி மற்றும் சஞ்சய் அகர்வால்
அடங்கிய அமர்வு, ”இந்துத் தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டப்படி, திருமணம்
ஆகாத மகள் தன் பெற்றோரிடமிருந்து திருமணத்துக்கான செலவுத்தொகையைக்
கேட்க உரிமை உள்ளது. அதனால் இந்த விவகாரத்தில் குடும்ப நல நீதிமன்ற
உத்தரவு ரத்துசெய்யப்படுகிறது. துர்க் குடும்ப நல நீதிமன்றம் மீண்டும் இந்த
வழக்கை விசாரித்துத் தீர்ப்பு வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டது.

1956 சட்டத்தின் பிரிவி 3 (பி), (ii) ஆகியவற்றின் அடிப்படையில் விசாரணை
மேற்கொள்ள உத்தரவிட்டதுடன், குடும்ப நீதிமன்றத்தின்முன் தொடர்புடைய
வாதிகள் வந்து ஆஜராகும்படி உத்தரவிட்டது.

மேலும், ‘இந்த முடிவு முக்கியத்துவம் வாய்ந்தது’ என்றும் சதீஷ்கர் உயர்நீதி
மன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

”இந்த வழக்கு அனைத்து சட்டப் புத்தகங்களிலும் இடம்பெறும்” என்று
இராஜேஸ்வரியின் வழக்கறிஞர் திவாரி கூறியுள்ளார்.

தற்போது இந்தத் தீர்ப்பு பெண்கள் மத்தியில் மட்டுமன்றி, பெற்றோர் மத்தியிலும்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.