இந்த ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய 18வது ஐபிஎல் சீசன், ரசிகர்களின் உற்சாகத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றது. ஆனால், மிகுந்த எதிர்பார்ப்புடன் போட்டிக்கு இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களின் நம்பிக்கையை இழந்துள்ளது. இதுவரை 8 போட்டிகளில் ஆடியுள்ள சென்னை, வெறும் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் சிக்கி தவித்து வருகிறது.
இந்நிலையில் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா தனது கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தியுள்ளார். “ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் போன்ற வீரர்களை ஏலத்தில் தவிர்த்து விட்டது பெரிய தவறு. அணியின் நிர்வாகம் மற்றும் தலைமை பயிற்சியாளர் தரமான வீரர்களை வாங்குவதில் கவனம் செலுத்தவில்லை,” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஏலத்திற்கு முன்பு ரூ. 120 கோடி வசதியுடன் இருந்த நிலையில், ரூ. 65 கோடிக்கு ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, தோனி, துபே மற்றும் பதிரானாவை தக்க வைத்ததும், புதிய வீரர்களை வாங்கும் வாய்ப்பை குறைத்துவிட்டதாகவும் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.