சுதந்திர தினத்தையொட்டி தொடர் விடுமுறை வருவதால், வெளியூர் செல்பவர்கள் வசதிக்காக தமிழக அரசு கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :
15/08/2025 அன்று சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு 13/08/2025 அன்று சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி. கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர். சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 13/08/2025 (புதன்கிழமை) அன்று 375 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
14/08/2025 (வியாழக்கிழமை) அன்று 570 பேருந்துகளும், 15/08/2025 (வெள்ளிக் கிழமை) மற்றும் 16/08/2025 (சனிக்கிழமை) 375 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை. நாகை, வேளாங்கண்ணி, ஒசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 14/08/2025 வியாழக்கிழமை அன்று 100 பேருந்துகளும் மற்றும் 15/08/2025 வெள்ளிக் கிழமை அன்று 90 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது
பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து 14/08/2025 மற்றும் 15/08/2025 ஆகிய இரு நாட்களுக்கு 24 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 17/08/2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று 715 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வார இறுதியில் புதன் கிழமை அன்று 8,145 பயணிகளும், வியாழக்கிழமை அன்று 26,534 பயணிகளும், வெள்ளிக்கிழமை அன்று 5,004 பயணிகளும். சனிக்கிழமை 3,678 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 23,266 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு முன்பாகவே தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.