சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகியதிலிருந்து மாநில அரசியலில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய், ஆட்சி அமைக்க உரிமை கோரி மூன்று முறை ஆளுநரை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இதுவரை ஆளுநர் தரப்பில் அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்படாதது அரசியல் வட்டாரங்களில் கடும் விவாதத்தையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான ஆதரவை பெற தமிழக வெற்றி கழகம் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்று மாலை 4 மணிக்கு தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அறிவிப்பு தமிழக அரசியலில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
மற்றொரு புறம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களுடன் அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பல்வேறு ஊகங்களை கிளப்பியது.
இந்நிலையில், ஆலோசனை கூட்டம் முடிந்ததும் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “17வது தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு, தற்போதைய அரசியல் சூழலில் முக்கிய அரசியல் சைகையாக பார்க்கப்படுகிறது
