நடிகர் சரவணன் கடந்த 2003ஆம் ஆண்டு சூர்யஸ்ரீ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2019இல் ஸ்ரீதேவி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவி மற்றும் இரண்டாவது மனைவியுடன் மாங்காடு அருகே மவுலிவாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருவருடன் சரவணன் வசித்து வந்தார்.
இந்நிலையில், அவரது முதல் மனைவியான சூர்யஸ்ரீ, நடிகர் சரவணன் மீது ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தானும், சரவணனும் கடந்த 1996 முதல் 2003ஆம் ஆண்டு வரை திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து, அதன் பின்பு 2003இல் திருமணம் செய்து கொண்டோம். தான் செய்த ‘கஸ்டம்ஸ் ஏஜென்ஸ் ஹவுஸ்’ தொழிலில் வந்த வருமானத்தில் சரவணன் தன்னுடன் வாழ்ந்து வந்தார்.
பல்வேறு கட்டங்களில் சரவணனுக்கு நிதியுதவி செய்துள்ளேன். ஆனால் தற்போது தனக்கு சாப்பாடு கூட அவர் கொடுப்பதில்லை. இரண்டாவது மனைவி ஸ்ரீதேவியுடன் சேர்ந்து தன்னை அடித்து துன்புறுத்தி, கொலை மிரட்டல் விடுக்கிறார். எனக்கு பராமரிப்பு தொகையாக ரூ.40 லட்சம் தருவதாக கூறியும் அவர் ஏமாற்றி விட்டார். எனவே, சரவணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் புகார் அளித்துள்ளார்.