Saturday, May 31, 2025

சீன போர் விமானங்கள் இனி தப்பிக்க முடியாது! இந்தியா உருவாக்கிய அதி நவீன ரேடார் அமைப்பு!

சமீப நாட்களாக இந்தியா தொடர்ந்து அதன் பாதுகாப்பு திறன்களை அடுத்த நிலைக்கு கொண்டுசெல்லும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த வரிசையில் இந்தியா தற்போது உள்நாட்டிலேயே Surya Very High Frequency ரேடார் அமைப்பை உருவாக்கி அதிரடி காட்டியிருக்கிறது. இந்த ரேடார் அமைப்பு மிகவும் நவீனமானது. ஏனெனில் இது ஆறாவது தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்களைக் கூட துல்லியமாக கண்டறியும் திறன் கொண்டது. பெங்களூருவைச் சேர்ந்த பிரபல நிறுவனத்தால் இந்திய விமானப்படைக்காக ரூ.200 கோடி செலவில் இந்த ரேடார் உருவாக்கப்பட்டுள்ளது.

VHF Band-டில் இயங்கும் சூர்யா ரேடார், நீண்ட அலைநீளங்களைப் பயன்படுத்துவதால் சீனாவின் J-20 போர் விமானங்கள் மற்றும் wing loong ட்ரோன்கள் போன்ற ஸ்டெல்த் விமானங்களைக் கண்டறியும் தொழில்நுட்பம் கொண்டது. இது வழக்கமான ரேடார்களின் கண்ணில் மண்ணை தூவி தப்பிக்கும் ஸ்டெல்த் விமானங்களைக் கண்டறியும் ஆற்றல் கொண்டது. மேலும் இந்த ரேடார் 360 கிலோமீட்டர் தொலைவில் 2 சதுர மீட்டர் ரேடார் குறுக்குவெட்டுடன் இலக்குகளைக் கண்டறிய முடியும் என்பது ஆச்சரியமே. மட்டுமல்லாமல் இது 360 டிகிரி கவரேஜை கொடுப்பதோடு நிமிடத்திற்கு 10 முறை சுழன்று துல்லியமான முறையில் கண்காணிக்கிறது.

சீனா தன்னுடைய ஐந்தாவது தலைமுறை போர் விமானமான J-20 ஐ பாகிஸ்தானுக்கு கொடுக்கப் போகிறது என்ற பரபரப்பான சூழ்நிலையில் Surya Very High Frequency ரேடார் பற்றிய இந்த செய்தி நேர்மறையான அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த ரேடார் உள்நாட்டு வான் பாதுகாப்பு கட்டமைப்பு, ஆகாஷ் மற்றும் QRSAM ஏவுகணை அமைப்புடன் சேர்ந்து செயல்படும் பட்சத்தில் சீனாவின் போர் விமானங்கள் இந்த ரேடாரிலிருந்து தப்பிக்க முடியாது என்பது நிச்சயம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news