சென்னையில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது. இதனால் சிக்னல்களில் வாகன ஓட்டிகள் நீண்ட நீரம் காத்திருக்கும் சூழல் உருவாகிறது.
இந்நிலையில் வாகன ஓட்டிகள் அதிக நேரம் நிற்பதை குறைக்கும் வகையில் முக்கியமான 165 இடங்களில் சென்சார் கேமராக்கள் மூலம் இயங்கும் தானியங்கி சிக்னல்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த கேமராக்களின் செயல்பாடுகளை போக்குவரத்து போலீசார் இன்று (ஜூன் 18) இயக்கி பார்த்து பரிசோதித்தனர். சென்னையில் அமைக்கப்பட்டு வரும் இந்த சிக்னல்களில் சென்சார் தொழில்நுட்பத்துடன் கூடிய கேமரா உள்ளதால் போக்குவரத்துக்கு ஏற்ப சிக்னல்களை தானாகவே மாற்றிக் கொள்ளும் வசதி உள்ளது.
அதாவது, சிக்னலில் பச்சை விளக்கு எரியும் போது அனைத்து வாகனங்களும் சென்றவுடன் வேறு வாகனங்கள் இல்லையெனில் தானாகவே சிகப்பு விளக்கு எரியும். இதேபோல, அதிகளவில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டால் உடனே பச்சை விளக்கு எரிந்து வாகனங்கள் செல்ல வழி வகுக்கும்.
இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது குறைவதுடன், சிக்னல்களில் வாகன ஓட்டிகள் அதிக நேரம் நிற்பதும் குறையும் என கூறப்படுகிறது. மேலும் இந்த கேமராவில் ஒரு நாளைக்கு எத்தனை வாகனங்கள் செல்கின்றன, எவ்வளவு வேகத்தில் செல்கின்றன என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்களை சேமிக்கும்.