சமீபகாலமாக அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கும் நபராக அஸ்வின் இருக்கிறார். கிரிக்கெட் குறித்து தனது Youtube பக்கத்தில் பேசி அதனால் வெகுவாக சர்ச்சைக்குள்ளான அஸ்வின், தற்போது அரசின் தடையை மீறி நண்பர்களுடன் ஆட்டம் போட்டு, மீண்டும் ஒரு சர்ச்சைக்கு திரி கொளுத்திப் போட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறில் இருந்து, அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள அருவிக்கரையில், பறளியாறு ஓடுகிறது. இங்கு பாறைகளின் நடுவே தண்ணீர் பாய்ந்தோடும் காட்சி, பார்ப்பவர்களின் மனதை கொள்ளை கொள்ளும். இதன் காரணமாக ஏராளமான தமிழ் திரைப்படங்களிலும் இந்த பறளியாறு இடம் பெற்றுள்ளது.
லேட்டஸ்ட்டாக சமூக வலைதளங்களை பார்த்து, ஏராளமான மக்கள் இங்கு படையெடுக்க ஆரம்பித்து இருக்கின்றனர். பறளியாறு பகுதியில் பெய்து வரும் மழை மற்றும் பேச்சிப்பாறை அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரால், சுற்றுலா பயணிகள் பறளியாற்றில் குளிக்க வேண்டாம் என மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.
நிலைமை இப்படியிருக்க ஆபத்தை உணராமல், ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய நண்பர்களுடன் இங்கு குளித்து மகிழ்ந்துள்ளார். அத்துடன் தனது சமூக வலைதள பக்கத்திலும் இதுதொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதைப்பார்த்த நெட்டிசன்கள், ” ஆபத்த உணராம நீங்களே இப்படி பண்ணலாமா? கொஞ்சமாச்சும் பொறுப்போட நடந்துக்குங்க,” இவ்வாறு விதவிதமாக அவரை விளாசி வருகின்றனர்.