அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் டிரம்ப் நிர்வாகம் குதித்துள்ளது. இதற்கு எதிராக நடந்த போராட்டங்களில் வன்முறை வெடித்துள்ளது. இந்நிலையில் போராட்டங்களை கட்டுப்படுத்த தேசிய பாதுகாப்புப்படையினரை டிரம்ப் குவித்திருக்கிறார். இந்த உத்தரவுக்கு எதிராக கலிபோர்னியாவை சேர்ந்த அதிகாரிகள் நீதிமன்றத்தை நாட திட்டமிட்டிருக்கின்றனர்.
நேற்று முன்தினம் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் 44 பேர், சட்ட விரோதமாக தங்கியிருந்த காரணத்தால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் மற்ற சட்டவிரோத குடியேறிகளும் போராட்டத்தில் இறங்கினர். இந்த போராட்டத்தில் காவல்துறைர் தலையிட்டதால் அது வன்முறையாக உருவெடுத்திருக்கிறது.
இந்த கலவரத்தில் “இன்று அதிபராக இருக்கும் டிரம்ப் உள்ளிட்ட பல வெள்ளையர்கள், சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் வந்து குடியேறிவர்கள்தான். அவர்களே குடியேறிகளாக இருக்கும்போது நாங்கள் வந்தால் என்ன தவறு?” என்று முழக்கங்கள் எழுப்பப்படுகின்றன.
லாஸ் ஏஞ்சல்ஸ் இப்படியாக கலவர பூமியாக மாறியிருக்க போராட்டக்காரர்களை அடக்க தேசிய பாதுகாப்பு படையின் உதவியை டிரம்ப் நாடியுள்ளார். ஆயுதம் தாங்கிய இவர்கள் போராட்டக்காரர்களை சுட்டு தள்ளுவதற்கும் தயங்க மாட்டார்கள். இதனால் கலிபோர்னிய அதிகாரிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். மேலும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இதற்கு தடை உத்தரவை பெற இருப்பதாகவும் கூறியுள்ளார். கடந்த நாட்களில் பல விஷயங்களில் நீதிமன்ற உத்தரவுகள், டிரம்ப்பின் கைகளை கட்டிப்போட்டுள்ளதால் இந்த முறையும் அப்படி நடந்தால் அது டிரம்ப்புக்கு பெரும் பின்னடைவாகவே இருக்கும் என்பது நிச்சயம்.