மத்திய கிழக்கில் பற்றி எறியும் போர் பதற்றத்துக்கு நடுவே இங்கிலாந்து போர் விமானம் ஒன்று கேரளாவில் அவசரமாக தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த விமானம் ஏன் அங்கு தரையிறக்கப்பட்டது என்று தெரியுமா?
இங்கிலாந்தின் F-35 ரக போர் விமானம் ஒன்று, திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. எரிபொருள் குறைவாக இருந்ததால் அந்த போர் விமானம் தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்டெல்த் ரக போர் விமானமான இது, இங்கிலாந்தின் HMS prince of wales கேரியர் ஸ்ரைக் குழுவைச் சேர்ந்தது. இது இந்தோ-பசிபிக் பகுதியில் சமீபத்தில் இந்திய கடற்படையுடன் கூட்டு ராணுவ பயிற்சியை முடித்ததைத் தொடர்ந்து விமானம் தாங்கி கப்பலில் இருந்து புறப்பட்டது. அப்போது விமானத்தில் எரிபொருள் குறைவாக இருப்பதை கவனித்த விமானி, திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி கேட்டுள்ளார்.
இதனையடுத்து, போர் விமானம் பாதுகாப்பாக தரைறிங்குவதற்காக, விமான நிலைய அதிகாரிகளால் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. பின்னர் அந்த விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. அடுத்ததாக மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு விமானத்திற்கு எரிபொருள் நிரப்பப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச அளவில் தற்போது போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில், இங்கிலாந்தின் இந்த அதிநவீன போர் விமானம் கேரளாவில் தரையிறங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.