சிறுவர்களுக்காக எழுதப்பட்ட கதைகளுக்கும் இனி புக்கர் பரிசு வழங்கப்பட உள்ளது என புக்கர் பரிசு அறக்கட்டளை அறிவித்துள்ளது. இந்த புதிய பிரிவு 2026ஆம் ஆண்டில் துவங்கப்படவுள்ளது.
தற்போது, இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் ஆங்கிலத்தில் வெளிவரும் சிறந்த புனைகதைப் புத்தகத்துக்கே ஒவ்வொரு ஆண்டும் உலகப் புகழ்பெற்ற புக்கர் பரிசு வழங்கப்படுகிறது. இதன் வெற்றியாளர் 50,000 பவுண்ட் ஸ்டெர்லிங் என்ற பெரும் பரிசுத் தொகையையும் பெறுகின்றனர்.
இந்நிலையில், 8 முதல் 12 வயது வரை உள்ள சிறுவர்கள் வாசிக்க ஏற்ற கதைகளுக்காக தனிப்பட்ட புக்கர் பரிசு வழங்க புக்கர் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. இந்தப் பரிசு, சிறுவர் இலக்கியத்தைக் கௌரவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டதுடன், சிறுவர் வாசிப்பு பழக்கத்தையும் ஊக்குவிக்கிறது.
சிறுவர் புக்கர் பரிசுக்கான தேர்வுக் குழுவில், பெரியவர்களுடன் குழந்தைகளும் இடம்பெறுவது சிறப்பு அம்சமாகும். குழந்தைகள் தங்களுக்குப் பிடித்த கதைகளின் அடிப்படையில் தேர்வில் பங்கெடுப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பிரிவுக்கான விண்ணப்பங்கள் அடுத்தாண்டு முதல் ஏற்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த சிறுவர் கதைக்கு 2027ஆம் ஆண்டில் முதல்முறையாக புக்கர் பரிசு வழங்கப்படவுள்ளது. இதற்காகப் புத்தகம் இங்கிலாந்து அல்லது அயர்லாந்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டதாகவோ அல்லது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டதாகவோ இருக்க வேண்டும் என விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு சிறுவர் இலக்கியத்தை சர்வதேச மேடையில் உயர்த்தும் நோக்கத்துடன் புக்கர் அறக்கட்டளை புதிய முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.
