சமீப காலமாக தமிழகத்தில் அரசியல் பிரமுகர்கள், அரசு அலுவலகங்கள் என பல இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது.
இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்தில் சோதனையில் ஈடுபட்டு, வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியும் போது மிரட்டல் விடுத்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்துவதுண்டு.
இந்த நிலையில், கவர்னர் மாளிகை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பா.ஜ.க. தலைமை அலுவலகம், நடிகர் எஸ்.வி.சேகர் இல்லத்திற்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும், தேனாம்பேட்டையில் உள்ள நடிகை திரிஷா வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
இதனையடுத்து போலீசார் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.