கர்நாடக மாநிலத்தில் ஓலா, ஊபர், ரேபிடோ உள்ளிட்ட தனியார் டாக்சி நிறுவனங்கள் பைக் டாக்சி சேவையை வழங்கி வருகின்றன. இதில் பெங்களூருவில் மட்டும் சுமார் 1.20 லட்சம் பைக் டாக்சிகள் பதிவு செய்யப்பட்டு இயக்கப்பட்டு வந்தன.
இதற்கிடையே ஆட்டோ டிரைவர்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, பைக் டாக்சி சேவைக்கு தடை விதிக்குமாறு தீவிர போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து கர்நாடக அரசு பைக் டாக்சி சேவைக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதனால், மாநிலத்தில் பைக் டாக்சி சேவை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் கர்நாடகாவின் 8 மாவட்டங்களைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்ட பைக் டாக்சி ஓட்டுநர்கள் பெங்களூருவில் பேரணி நடத்தி, தடையை நீக்கி, பைக் டாக்சி சேவையை மீண்டும் அனுமதிக்கக் கோரி வலியுறுத்தினர்.
இந்த போராட்டத்தில் மைசூர், மண்டியா, ஹாசன், தாவணகெரே, தும்கூர், ராமநகரா, சிவமொக்கா மற்றும் கனகபுரா ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.