பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனம் செலுத்த வேண்டிய மிக முக்கியமான அறிவிப்பு தற்போது வந்துள்ளது. EPFO, அதாவது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, தனது ஆட்டோ கிளைம் செட்டில்மெண்ட் வரம்பில் பெரிய மாற்றம் செய்துள்ளது. இதுவரை ரூ.1 லட்சம் வரை மட்டுமே பிஎஃப் பணத்தை நேரடியாகக் கோர முடிந்தது. ஆனால் இப்போது இந்த வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது பிஎஃப் உறுப்பினர்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக அமைந்துள்ளது என்று, நேரடியாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா அறிவித்திருக்கிறார்.
2025 மார்ச் மாதம் நடைபெற்ற EPFO நிர்வாகக் குழுக் கூட்டத்தில், ரூ.5 லட்சம் வரையிலான ஆட்டோ கிளைம் செட்டில்மெண்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தற்போது பிஎஃப் உறுப்பினர்கள், முன்னதாக இருந்ததைவிட எளிதாகவும், விரைவாகவும், டிஜிட்டல் முறையில், எந்த இடையூறும் இல்லாமல் பணத்தைப் பெற முடிகிறது. இதற்கு முன்னர், ரூ.1 லட்சத்திற்கு மேல் பெற வேண்டுமானால் நேரடி சரிபார்ப்பு, ஆவணங்கள், அனுமதி போன்ற சிக்கலான செயல்முறைகள் இருந்தன. இப்போது அது இல்லாமல், தேவையான தருணங்களில் பணத்தை உடனே பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மருத்துவ செலவுகள், குடும்ப அவசரங்கள் அல்லது பிற முக்கிய தேவைகளில் இந்த மாற்றம் மிகுந்த உதவியாக இருக்கும். கடந்த 2020-ஆம் ஆண்டு, கொரோனா தொற்றுக்காலத்தில், பிஎஃப் பணத்தை உடனடியாகப் பெற வேண்டிய சூழ்நிலையில் இந்த ஆட்டோ செட்டில்மெண்ட் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது இந்த வரம்பு ஐந்து மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
EPFO உறுப்பினர்களுக்கு சமீபத்தில் ஒரு முக்கிய எச்சரிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. உங்கள் பிஎஃப் கணக்குகள் மற்றும் அதில் உள்ள தனிப்பட்ட தகவல்களை மூன்றாம் தரப்பு முகவர்களிடம் பகிர வேண்டாம். இந்த சேவைகள் அனைத்தும் அரசு அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வழியாகவே பெற வேண்டும். இது உங்கள் கணக்கு பாதுகாப்பிற்கு மிகவும் அவசியமானது. உங்கள் தகவல்களைத் தக்கவைத்துக் கொள்ள, EPFO தரும் இந்த எச்சரிக்கையை கடைபிடிக்க வேண்டும்.