UPI வரவால் இந்தியாவின் ஆன்லைன் பண பரிமாற்றம், அடுத்தடுத்த லெவல்களுக்குச் சென்று விட்டது. பயன்படுத்த சிம்பிளாக இருப்பதால், எளிய மக்களின் வாழ்விலும் UPI மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
UPIஐ நெறிமுறைப்படுத்தும் National Payments Corporation of India, அதாவது NPCI தற்போது புதிய அப்டேட் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன்படி உங்களது சொந்த UPI அக்கவுண்டினைப் பயன்படுத்தி, மற்றவர்களும் பணம் அனுப்ப முடியும்.
இந்த அம்சத்தின்படி உங்களது குடும்பத்தினர் மட்டுமின்றி, உங்களது வங்கிக்கணக்குடன் நேரடியாக இணைக்கப்படாத நபர்களும் கூட, உங்களது அக்கவுண்டில் இருந்து பணம் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். இதற்காக UPI Circle எனப்படும் புதிய அம்சமொன்றை, NPCI அறிமுகம் செய்திருக்கிறது.
இதன்படி ஒரு UPI கணக்கினைப் பயன்படுத்தி, 5 நபர்கள் வரை பணம் செலுத்த முடியும். உங்களது UPI கணக்கு வழியாக மற்றவர்கள், பணம் செலுத்த வேண்டும் என்றால், அவர்களை Secondary User அதாவது இரண்டாம் நிலை பயனராக நீங்கள் சேர்க்க வேண்டும்.
அவர்களின் UPI ID அல்லது QR கோடினை Scan செய்வதன் மூலம், இதற்கான அனுமதியை நீங்கள் வழங்க முடியும். இதில் முழு கட்டண பகிர்வு மற்றும் பகுதி கட்டண பகிர்வு என 2 முறைகள் உள்ளன. முழு கட்டண பகிர்வினை நீங்கள் தேர்வு செய்தால், இரண்டாம் நிலை பயனருக்கு உங்களது UPI PIN தேவைப்படாது.
இதைப் பயன்படுத்தி அவர்கள் ஒரு குறிப்பிட்ட வரம்பு வரை, பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும். அதேநேரம் பகுதி கட்டண பகிர்வினை நீங்கள் தேர்வு செய்தால், ஒவ்வொரு முறையும் இரண்டாம் நிலை பயனருக்கு உங்களின் ஒப்புதல் தேவைப்படும்.
கடந்த 2024ம் ஆண்டே இந்த வசதியை NPCI அறிமுகம் செய்துவிட்டது. என்றாலும் தற்போது BHIM செயலியில் மட்டுமே இந்த வசதி கிடைக்கிறது. விரைவில் Google Pay, Phone Pe, PayTM போன்ற மற்ற செயலிகளிலும், இந்த அம்சம் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.