எங்கள் ‘முதுகில்’ குத்தும் செயல் – காங்கிரஸ் மீது திமுக ‘காட்டம்’

தவெக கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு அளிப்பது எங்களின் முதுகில் குத்தும் செயல் என்று, திமுக கட்சியின் செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை விமர்சித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் சமீபத்திய பேட்டியில், ” தவெகவுக்கு ஆதரவு அளிப்பது என்ற முடிவை காங்கிரஸ் கட்சி எடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் இந்த நிலைப்பாடு மிகவும் குறுகிய பார்வை கொண்டது; தொலைநோக்குப் பார்வை அற்றது. இப்படி ஒரு முடிவை எடுப்பதற்காக அவர்கள் வருந்த நேரிடும்.

2029 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அந்த தேர்தலில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றிவிட முடியும் என நாங்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தோம். ஆனால், காங்கிரஸ் இப்போது எடுத்துள்ள இந்த முடிவு காரணமாக, அவர்கள் ஒரு நிலையற்ற கூட்டணி கட்சியாக மாறிவிட்டார்கள். காங்கிரஸ் கட்சியை நம்ப முடியாது என்ற ஒரு கருத்து நாடு முழுவதும் பரவியுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு நாள்தான் ஆகிறது.

அதற்குள் காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்திருப்பது, முதுகில் குத்தும் செயல். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியவற்றுக்கு இடம் கொடுக்க விரும்பவில்லை என்றும் எனவே இந்த முடிவை எடுப்பதாகவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இந்த முடிவை காங்கிரஸ் கட்சி முழு மனதுடன் எடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவு கூட்டணியில் உள்ள பிற கட்சிகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும். நாங்கள் ஒருபோதும் காங்கிரஸ் கட்சியை ஏமாற்றியதில்லை.

தவெக பெரும்பான்மை இலக்கை எட்ட 11 இடங்கள் தேவைப்படுகின்றன. 47 இடங்களைக் கொண்டுள்ள அதிமுக நிபந்தனையற்ற ஆதரவை வழங்க தயராக இருக்கிறது. நீங்கள் விஜய்யாக இருந்தால் யாருடைய பேச்சைக் கேட்பீர்கள்? ஐந்து இடங்களைக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியையா அல்லது 47 இடங்களைக் கொண்டுள்ள அதிமுகவையா? காங்கிரஸ் கட்சி மிகத் தவறான ஒரு முடிவை எடுத்துவிட்டதாக நான் கருதுகிறேன்”, என தெரிவித்துள்ளார்.

Related News

Latest News