Tuesday, December 16, 2025

மூளையைத் தாக்கும் ‘அமீபா!’ அச்சுறுத்தும் உயிரிழப்புகள்! எதன் மூலம் பரவுகிறது?

கேரளாவில் மூளையைத் தாக்கும் ‘அமீபா’ தொற்றுநோய் வேகமாக பரவி வருவது கவலைக்குரியதாக உள்ளது. இதுவரை 104 பேர் இந்த அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தனது முகநூல் பதிவில் விளக்கம் அளித்துள்ளார். கடந்த 2023ம் ஆண்டு கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, மூளை காய்ச்சல் தொடர்பான நோயாளிகளின் விவரங்கள் கட்டாயமாக பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது. 2024ஆம் ஆண்டில் தொடங்கிய இந்த பதிவின் மூலம் சிலருக்கு ஏற்பட்ட மூளை நோயின் காரணம் “மூளையை தாக்கும் அமீபா” என தெரியவந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கூறுகையில், தற்போது கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களில் அதிக அளவில் நோய்த் தாக்கம் காணப்படுகிறது. அதே நேரத்தில் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களிலும் நோய்ப் பரவல் அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தொற்றை தடுக்கவும், முன்னதாகவே கண்டறியவும், கேரள அரசு ‘ஒன் ஹெல்த்’ என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் பலத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் உலக அளவிலான ஒப்பீட்டில் கேரளாவில் இந்த நோயால் உயிரிழப்போர் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

மூளைச் சவ்வை தாக்கி, மூளைத்திசுக்களை பாதிக்கும் தன்மை கொண்ட இந்த அமீபா தொற்று, நீர் வழியே பரவுவதாக நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

Related News

Latest News