4 நிமிட Zoom காலில் இந்திய ஊழியர்களைத் தூக்கிய அமெரிக்க நிறுவனம்!

ஒருவர் ஒரு நிறுவனத்திற்காகப் பல ஆண்டுகள் உழைக்கிறார். திடீரென ஒரு நாள், நான்கு நிமிட Zoom அழைப்பில், “உங்கள் வேலை முடிந்துவிட்டது,” என்று சொன்னால் எப்படி இருக்கும்? எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது, எந்த விளக்கமும் கொடுக்கப்படாது. இப்படி ஒரு மனிதாபிமானமற்ற, கொடூரமான பணிநீக்கச் சம்பவம்தான், ஒரு அமெரிக்க நிறுவனத்தில் வேலை செய்த இந்திய ஊழியர்களுக்கு நடந்துள்ளது.

பாதிக்கப்பட்ட ஊழியர்களில் ஒருவர், தனது அதிர்ச்சிகரமான அனுபவத்தை, ரெட்டிட் (Reddit) என்ற சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அது, இப்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அவர் தனது பதிவில், “அது ஒரு சாதாரண வேலை நாள்தான். காலை 9 மணிக்கு வேலையைத் தொடங்கினேன். திடீரென, காலை 11 மணிக்கு, நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி, அதாவது COO உடன் ஒரு கட்டாய சந்திப்பு இருப்பதாக அழைப்பு வந்தது. அந்த Zoom அழைப்பு தொடங்கியதும், எங்கள் அனைவரின் கேமராக்களையும், மைக்ரோஃபோன்களையும் அவர் முடக்கிவிட்டார்,” என்று கூறியுள்ளார்.

“அடுத்து, அவர் சொன்ன செய்தி, எங்கள் தலையில் இடியாய் இறங்கியது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அவர் அறிவித்தார். இது, உங்கள் செயல்திறன் குறைவு என்பதால் அல்ல, நிறுவனத்தின் உள் மறுசீரமைப்பு காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

“மிகப்பெரிய அதிர்ச்சி என்னவென்றால், அவர் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்க மறுத்து, அறிவிப்பை வெளியிட்ட நான்கே நிமிடங்களில், அழைப்பைத் துண்டித்துவிட்டுச் சென்றுவிட்டார். பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மட்டும் மின்னஞ்சல் வரும் என்று கூறப்பட்டது,” என்று அந்த ஊழியர் தனது வேதனையைப் பதிவு செய்துள்ளார்.

அக்டோபர் மாதத்திற்கான முழுச் சம்பளமும், விடுமுறைப் பணமும் வழங்கப்படும் என்று நிறுவனம் உறுதியளித்துள்ளது. இருந்தாலும், “நான் வேலையை விட்டு நீக்கப்படுவது இதுவே முதல் முறை. இது மிகவும் மோசமாக உணர்கிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.

இந்தப் பதிவு வெளியான உடனேயே, சமூக வலைதளங்களில் ஆதரவு குவிந்தது. பலரும், அந்த ஊழியருக்கு ஆறுதல் கூறியதோடு, தங்களால் முடிந்த வேலைவாய்ப்பு உதவிகளையும் வழங்க முன்வந்துள்ளனர். “தைரியமாக இருங்கள், இதிலிருந்து நீங்கள் இன்னும் வலிமையாக மீண்டு வருவீர்கள்,” என்று பலரும் அவருக்கு ஊக்கமளித்து வருகின்றனர்.

தொழில்நுட்பத்தின் பெயரால், மனித உணர்வுகளுக்கும், உழைப்பிற்கும் மதிப்பளிக்காமல், ஒரு இயந்திரத்தைப் போல ஊழியர்களை நடத்தும் இது போன்ற நிறுவனங்களின் செயல், வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது.

Related News

Latest News