Friday, September 12, 2025

உலகின் முதல் AI அமைச்சரை நியமித்த அல்பேனியா – ஊழலுக்கு எதிரான அதிரடி நடவடிக்கை

ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு முன்னோடி நடவடிக்கையாக, ஐரோப்பிய நாடான அல்பேனியா, தனது அரசாங்கத்தின் பொது ஒப்பந்தத் துறையை நிர்வகிக்க ஒரு செயற்கை நுண்ணறிவை (AI) அமைச்சராக நியமித்துள்ளது. ‘டையெல்லா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த AI பாட், இனி அரசாங்கத்தின் பல கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர்களை முடிவு செய்யும் அதிகாரத்தைப் பெற்றிருக்கும்.

ஐரோப்பாவின் பால்கன் பகுதியில் அமைந்துள்ள அல்பேனியாவின் பிரதமர் எடி ராமா, தனது புதிய அமைச்சரவையை அறிமுகப்படுத்தியபோது இந்த அறிவிப்பை வெளியிட்டு, உலக அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளார். ‘டையெல்லா’, அதாவது ‘சூரியன்’ என்று பொருள்படும் இந்த AI, மனித தலையீடு இன்றி பொது ஒப்பந்தங்கள் மற்றும் டெண்டர்களை நிர்வகிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக ஊழலில் சிக்கித் தவித்துவரும் அல்பேனியாவில், அரசாங்க டெண்டர்கள் சட்டவிரோத பணப் பரிமாற்றத்திற்கான ஒரு முக்கிய வழியாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. சர்வதேச போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் கும்பல்கள், தங்களது கருப்புப் பணத்தை வெள்ளையாக்க, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தும், மிரட்டியும் அரசாங்க ஒப்பந்தங்களைப் பெற்று வந்தன. இந்த ஊழல் கறை, அல்பேனியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு ஒரு பெரும் தடையாக இருந்து வருகிறது.

இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணும் வகையிலேயே இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் எடி ராமா இது குறித்துப் பேசும்போது, “இந்த AI அமைச்சர் டையெல்லாவுக்கு லஞ்சம் கொடுக்கவோ, மிரட்டவோ, சிபாரிசு செய்யவோ முடியாது. இதன் மூலம் அல்பேனியாவின் டெண்டர்கள் 100 சதவீதம் ஊழலற்றவையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த டையெல்லா அமைப்பு, அல்பேனிய மக்களுக்குப் புதியதல்ல. இதற்கு முன்பு, அரசின் ‘இ-அல்பேனியா’ என்ற இணையதளத்தில், பொதுமக்களுக்குத் தேவையான அரசு ஆவணங்களைப் பெற உதவும் ஒரு மெய்நிகர் உதவியாளராக (Virtual Assistant) இது செயல்பட்டு வந்தது. தற்போது, இதற்கு அமைச்சர் அந்தஸ்துக்கு இணையான முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தத் திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஒரு செயற்கை நுண்ணறிவை மனிதர்கள் தங்கள் வசதிக்கேற்ப தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது என்றும், இதன் பின்னணியில் இருந்து யார் இயக்குவார்கள் என்ற வெளிப்படைத்தன்மை தேவை என்றும் பலர் கேள்வி எழுப்புகின்றனர். சமூக வலைதளங்களில் இது குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. “இறுதியில், திருட்டு வழக்கம் போல நடந்துவிட்டு, பழி மட்டும் இந்த AI மீது போடப்படும்” என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

உலகமே உற்று நோக்கும் இந்த முயற்சி, தொழில்நுட்பத்தின் மூலம் மனித சமூகத்தின் ஆழமான பிரச்சினையான ஊழலை ஒழிக்க முடியுமா என்ற முக்கிய கேள்விக்கு விடை தேடும் ஒரு பயணமாக அமைந்துள்ளது. இந்த முன்னோடித் திட்டம் வெற்றி பெறுமா அல்லது ஆபத்தான பரிசோதனையாக முடியுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News