திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வெட்டிக்காடு கீழத்தெருவை சேர்ந்தவர் முத்துலெட்சுமி. இவருக்கு வயது 85. கணவரை இழந்த இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் பாபு இவர் அதிமுக திருவாரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவருடைய தாய் மலர்க்கொடி.
இந்த நிலையில் மலர்கொடிக்கும் மூதாட்டி முத்துலட்சுமிக்கும் வீட்டின் அருகே ஆடு கட்டுவதில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று மூதாட்டி முத்துலெட்சுமி வீட்டில் தனியாக இருந்த பொழுது அங்கு மது போதையில் வந்த ஆனந்த் பாபு மற்றும் அவருடைய தாய் மலர்கொடி இருவரும் இணைந்து முத்துலெட்சுமியை கட்டையால் தாக்கியுள்ளனர்.
இதில் முத்துலெட்சுமிக்கு கை கால் தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த நிலையில் மூதாட்டி சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இதையடுத்து மூதாட்டியை கட்டையால் அடித்து கொன்றதாக மன்னார்குடி காவல்துறையினர் ஆனந்த் பாபு மற்றும் அவருடைய தாய் மலர் கொடி ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து ஆனந்த் பாபுவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாக உள்ள ஆனந்த் பாபுவின் தாய் மலர்கொடியை மன்னார்குடி காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
ஆடு கட்டும் பிரச்சனையில் மூதாட்டியை கட்டையால் அதிமுக பிரமுகர் அடித்துக் கொலை செய்த சம்பவம் மன்னார்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.